அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்

12

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா குறித்து அவதூறாக பேசியதாக கூறி, ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் நோட்டீஸ் அளித்து உள்ளது.

குற்றச்சாட்டு



ராஜ்யசபாவில் நேற்று பேரிடர் மேலாண்மை மசோதா 2024 மீதான விவாதம் நடந்தது.




அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பிரதமரின் தேசிய நிவாரண நிதி காங்கிரஸ் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. தே.ஜ., கூட்டணி ஆட்சியில் பிரதமர் மோடியால் 'பிஎம் கேர்ஸ்' நிதி உருவாக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு குடும்பம் தான் நாட்டை கட்டுப்படுத்தியது. பிரதமரின் நிவாரண நிதியில் காங்கிரஸ் தலைவரும் ஒரு அங்கமாக இருந்தார். இதற்கு நாட்டு மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள். உங்களை யாரும் பார்க்கவில்லை. கவனிக்கவில்லை என நினைத்து கொண்டு உள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.


அமித்ஷா தனது குற்றச்சாட்டில் யாரின் பெயரையும் குறிப்பிடவில்லை.




எதிர்ப்பு






இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சு அவை விதிகளை மீறுவதாகவும், சபையை அவமதிப்பது போல் உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.


இது தொடர்பாக அவர், ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மீது அவதூறான கருத்துகளை தெரிவித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கிறேன். சோனியாவின் பெயரை அவர் நேரடியாக சொல்லாவிட்டாலும், மறைமுகமாக அவரை பற்றிப் பேசி , அவர் மீது உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டி உள்ளார். சோனியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அவருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமித்ஷா முன்வைத்தார். அமைச்சரின் குற்றச்சாட்டு தவறானது. அவதூறானது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Advertisement