15 லட்சம் ரூபாய் லஞ்சம்: தேசிய நெடுஞ்சாலை துறை மேலாளர் கைது

7


புதுடில்லி: தனியார் நிறுவன பொது மேலாளரிடம் இருந்து, 15 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய பொது மேலாளர் உட்பட நான்கு பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்பான ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவன பொது மேலாளர், ஒப்பந்த பணி தொடர்பான பில் தொகையை அனுமதிக்கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர் ராம்பிரித் பஸ்வானை அணுகினார். அதற்கு அவர், 15 லட்சம் ரூபாய் தந்தால் பில்லில் கையெழுத்திடுவதாக தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக தகவல் கிடைத்த சி.பி.ஐ., அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கண்காணித்தனர். இந்நிலையில், சமீபத்தில் 15 லட்சம் ரூபாயை பஸ்வானிடம் தனியார் நிறுவன மேலாளர் கொடுத்தபோது, இருவரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்; அவர்களுக்கு உதவியாக இருந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

லஞ்சம் பெற உதவியாக இருந்த நெடுஞ்சாலை ஆணைய தலைமை பொது மேலாளர், பொது மேலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட ஆறு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன மூத்த அதிகாரிகள் நான்கு பேர் உட்பட 12 பேர் மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.



பஸ்வானுக்கு சொந்தமான பாட்னா, முசாபர்பூர், சமஸ்திபூர், பெகுசராய், ராஞ்சி, வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ., நடத்திய சோதனையில், 10 லட்சம் ரூபாயும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement