இன்ஜினியரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கோபி நகராட்சி உதவியாளர் கைது

4

கோபி : சிவில் இன்ஜினியரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, கோபி நகராட்சி உதவியாளரை ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.


ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர், வருண், 30. சிவில் இன்ஜினியர்; அவர் புதிய கட்டடம் கட்டுமான பணிக்கான அனுமதி கோரி, கோபி நகராட்சி ஆபீசில் உள்ள நகரமைப்பு அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அப்பிரிவின் உதவியாளரான சுப்பிரமணி, 50, என்பவர், சிவில் இன்ஜினியர் வருணிடம், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் வருண் புகார் அளித்தார்.


அப்புகாரின்படி, ஏ.டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் அடங்கிய குழுவினர், கோபி நகராட்சி ஆபீசில் காலை 11:00 மணிக்கு முகாமிட்டு மறைந்திருந்தனர். அப்போது ரசாயன பொடி தடவிய, 60 எண்ணிக்கை கொண்ட, 500 ரூபாய் நோட்டுகளாக, 30 ஆயிரம் ரூபாயை, இன்ஜினியர் வருண் வழங்கியபோது, சுப்பிரமணியனை கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பிடித்து கைது செய்தனர். இதனால்,கோபி நகராட்சி ஆபீசில் காலை முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement