பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு இயற்பியல் தேர்வு ஈசி; மாணவர்கள் கொண்டாட்டம் இயற்பியல் தேர்வு ஈசி; மாணவர்கள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளான நேற்று இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது. தேர்வு முடிந்ததை அடுத்து மாணவர்கள், கலர் பொடிகளை முகத்தில் பூசி கொண்டாடினர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 3ம் தேதி துவங்கியது. உயர்கல்விக்கு செல்லும் கனவில், படிப்பே கதியாக இருந்த மாணவர்களுக்கு, நேற்றுடன் தேர்வு நிறைவடைந்தது.

இதையொட்டி, தேர்வு முடிந்ததும் மாணவர்கள், தங்கள் நண்பர்களுக்கு கலர் பொடியை முகத்தில் பூசியும், பேனாவில் உள்ள இங்க்கை சட்டையில் தெளித்தும், மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

மாணவியரில் பலரும் கேக், இனிப்பு வழங்கியும், உயர்கல்விக்கு வாழ்த்து தெரிவித்தும் உற்சாகமாக விடைபெற்றனர்.

இயற்பியல் ஆசிரியர்கள் கூறியதாவது:

உயர்கல்வி, 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிட உதவும், இயற்பியல் தேர்வு நேற்று நடந்தது. இயற்பியல் தேர்வில், இரு மதிப்பெண் வினாக்கள், ஒரு ஐந்து மதிப்பெண் வினா தவிர மற்றவை அனைத்தும் எளிதாகவும், எதிர்பார்த்தவையாகவும் இருந்தன. இதனால், தேர்ச்சி பெறுவதும், 90 மதிப்பெண் வரை வாங்குவதும் எளிதாக இருக்கும்.

அதே சமயம், பாடத்தை நன்கு புரிந்து படித்தவர்களால் மட்டுமே, 'சென்டம்' வாங்க முடியும் வகையில், வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும், சென்டம் பெரிய அளவில் அதிகரிக்காது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர்-

Advertisement