தடுப்பு இல்லாத தரைபாலம் பொலம்பாக்கத்தில் விபத்து அபாயம்

சித்தாமூர்:பொலம்பாக்கம் கிராமத்தில் தரைபாலத்தின் தடுப்பு துாண்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் கிராமத்தில் இருந்து பெருவெளி கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஏரி உபரிநீர் கால்வாயை கடக்கும் 70 மீட்டர் நீளமுடைய தரைப்பாலம் உள்ளது.

தினசரி ஏராளமான வாகனங்கள் தரைப்பாலத்தை கடந்து செல்கின்றன.

தரைப்பாலத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க தரைப்பாலத்தின் இரண்டு ஓரங்களிலும் தடுப்பு துாண்கள் அமைக்கப்பட்டது.

தரைப்பாலம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், நாளடைவில் அதன் தடுப்பு துாண்கள் முற்றிலும் சேதமடைந்து,தற்போது தடுப்புத் துாண்கள் இல்லாத தரைபாலமாக உள்ளது.

மேலும் தரைபாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தால் இரவு நேரத்தில் தரைப்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரைபாலத்தில் தடுப்பு துாண்கள் அமைத்து , மின் விளக்கு வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement