ஓய்வு எஸ்.ஐ., கொலை சி.பி.ஐ., விசாரிக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாகீர் உசேன் பிஜிலி கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரியதில் டி.ஜி.பி., மற்றும் சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி முகமது மைதீன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஜாகீர் உசேன் பிஜிலி மார்ச் 18 ல் கொலை செய்யப்பட்டார்.

வக்புவாரிய நிலத்தை பாதுகாக்க சட்டரீதியாக போராடினார். சம்பவத்திற்கு முன், 'நிலப்பிரச்னை தொடர்பாக 2 போலீஸ் அதிகாரிகள் தன்னை மிரட்டினர். தனக்கு ஆபத்து உள்ளது' என வீடியோ வெளியிட்டார். இதை போலீசார், உளவுத்துறையினர் கவனிக்கத் தவறிவிட்டனர். போலீசார் விழிப்புடன் செயல்படுகின்றனரா என்ற அச்சம் நிலவுகிறது.

திருநெல்வேலி டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். அவர்கள் முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். ஜாகீர் உசேன் பிஜிலி குடும்பத்தினர், வக்புவாரிய சொத்து தொடர்புடைய ஜமாத் நிர்வாகிகளுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு டி.ஜி.பி., திருநெல்வேலி போலீஸ் கமிஷனர், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி, தற்போதைய நிலை குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Advertisement