ஊட்டியில் புலி தாக்கி வாலிபர் பரிதாப பலி

ஊட்டி; ஊட்டி கவர்னர் சோலை வனப்பகுதியில் புலி தாக்கி தோடர் பழங்குடியின வாலிபர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி கவர்னர்சோலை அருகே கல்லக்கொரை தோடர் மந்து (கிராமம்) பகுதியை மாசத் என்பவரின் மகன் கேந்தர் குட்டன்,38. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் எருமைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற எருமைகள் திரும்பி வரவில்லை.

இதனால், எருமைகளை தேடி அழைத்து வரவும், விறகு சேகரிக்கவும் கேந்தர் குட்டன் வன பகுதிக்குள் சென்றுள்ளார். இரவு அவர் வீட்டிற்கு திரும்பி வராததால், அவரை உறவினர்கள் இரவு முழுவதும் தேடினர். கண்டு பிடிக்க முடிய வில்லை.

நேற்று காலை மீண்டும் தேடியபோது கேந்தர் குட்டனின் உடல் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது, அவரை புலி அடித்து கொன்று பாதி உடலை உட்கொண்டு சென்றதை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலின் பேரில், மாவட்ட வன அலுவலர் கவுதம், வனச்சரகர்கள் கிருஷ்ணகுமார் உட்பட வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது, உடலை எடுக்க விடாமல், வன அலுவலரிடம் கிராம மக்கள், வாக்கு வாதம் செய்த போது கூறுகையில்,'இப்பகுதியில் புலி, காட்டெருமை நடமாட்டம் உள்ளது.கேந்தர் குட்டனை புலி கொன்றுள்ளது. இதனால், இங்கு வாழும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு புலியை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும். இப்பகுதியில் அதிகளவில் கற்பூர மரங்களை வெட்ட வேண்டும். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மீண்டும் அதே புலி வர வாய்ப்புள்ளது,' என்றனர்.

வன அலுவலர் கவுதம் கூறுகையில்,''இங்கு ஒருவரை கொன்ற விலங்கை பிடிக்க கூண்டு வைக்கப்படும். உள்ளூர் மக்கள் இங்கு புலி நடமாட்டம் உள்ளதாக கூறுகின்றனர்.

இதனால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். கற்பூர மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். தொடர்ந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement