ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்

5

நொய்டா: டில்லி அருகே, 'ஆட்டிசம்' பாதித்த சிறுவனை சரமாரியாக அடித்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

தலைநகர் டில்லி அருகே உள்ள நொய்டா, உ.பி.,யின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இங்கு, செக்டார் 55 பகுதியில் இருக்கும் சர்வதேச பள்ளி ஒன்றில், வருண் கோயல் என்பவரின் 10 வயது மகன் படிக்கிறான்.

'ஆட்டிசம்' எனப்படும், கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனைப் போன்ற மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக, சிறப்பு ஆசிரியர்கள் இந்த தனியார் பள்ளியில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி, அந்த சிறுவனை, ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவன் என்றும் பார்க்காமல், சிறப்பு பயிற்சியாளரான ஆசிரியர், சரமாரியாக அடித்தார்.

இது தொடர்பான வீடியோ, கடந்த 28ம் தேதியன்று வெளியானது. பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கும் வாட்ஸாப் குரூப்பில் யாரோ ஒருவர் பகிர்ந்துள்ளார்.

சமூக வலை தளங்களிலும் இந்த வீடியோ நேற்று முன்தினம் வேகமாக பரவியதையடுத்து, சிறப்பு பயிற்சியாளர், பள்ளி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மீது சிறுவனின் தந்தை வருண்கோயல் போலீசில் புகார் அளித்தார்.

பள்ளி ஆசிரியரும், சிறப்பு ஆசிரியருமான அனில் குமார், சிறுவனை அடித்ததாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, ஆசிரியர், தனியார் பள்ளி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மீது மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம், சிறுவர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆசிரியர் அனில் குமாரை கைது செய்ததோடு, முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், உ.பி., மாநில தொடக்கக் கல்வித் துறை சார்பாக, கவுதம புத்தா நகர் மாவட்ட கல்வி அதிகாரி ராகுல் பன்வார் விசாரணை நடத்தினார்.

அப்போது, முறையான அனுமதி இல்லாமல் தனியார் பள்ளி இயங்கியது தெரிந்ததால், பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

Advertisement