டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்காது; எண்ணெய் நிறுவனம் அறிவிப்பு

1

சென்னை: போதுமான கேஸ் சிலிண்டர் விநியோகம் இருப்பதால் நுகர்வோர்கள் பீதி அடைய வேண்டாம் என்று இந்திய எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதனால் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு வரலாம் என்று பேச்ககள் எழுந்துள்ளன.


இந்நிலையில் போதுமான கேஸ் சிலிண்டர் விநியோகம் இருப்பதாக எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளதால் நுகர்வோர்கள் பீதி அடைய வேண்டாம் என்று இந்திய எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து இந்திய எண்ணெய் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


அனைத்து மண்டலங்களில் இருந்தும் போக்குவரத்து நிறுவனங்களுடன் விரிவான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அண்மையிலான போக்குவரத்து டெண்டர் இறுதி செய்யப்பட்டது. அப்போது பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.


புதிய டெண்டர் விதிகள் எல்பிஜி போக்குவரத்தின் பாதுகாப்பு, செயல்திறனை மேம்படுத்துவதற்கு எங்களின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சிகள் ஒருபக்கம் இருந்தாலும் லாரி உரிமையாளர்களில் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


நிலைமைக்கு விரைவில் தீர்வு காண எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பொறுப்பான முறையில் நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தடையற்ற எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நடைமுறையில் இருப்பதால், நுகர்வோர்கள் பீதி அடைய வேண்டாம்.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement