தடையை மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கி தவித்த பொது மக்கள், மாணவர்கள்

திருப்புவனம்: திருப்புவனத்தில் தடையை மீறி ஒரே இடத்தில் பத்திற்கும் மேற்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் நேற்று பங்குனி திருவிழாவின் கடைசி நாள் என்பதால் பல இடங்களிலும் அன்னதானம், நீர் மோர் பந்தல், கலை நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழகத்தில் ஒலி மாசு கட்டுப்பாடு காரணமாக 2000ம் ஆண்டிலேயே கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த கூடாது என தடை உள்ளது. அதிலும் நகர்ப்புறங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடை உள்ளது.

நேற்று திருப்புவனத்தில் தடையை மீறி ஒரே இடத்தில் பத்திற்கும் மேற்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் தடையை மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த போலீசார் எப்படி அனுமதி கொடுத்தனர் என தெரியவில்லை. பொதுத்தேர்வு நடந்து வரும் சூழலில் விழாக்களில் குறிப்பிட்ட ஒலி அளவிற்கு மேல் வைக்க கூடாது, தேர்வு நடைபெறும் இடங்களில் ஸ்பீக்கர்கள் பயன்படுத்த கூடாது என்ற தடையை மீறி நேற்று அதிகாலை ஐந்து மணி முதல் தொடர்ச்சியாக ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டன.

அதிலும் மார்க்கெட் வீதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது அனைத்து திசைகளிலும் பத்திற்கும் மேற்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை கட்டி பாடல்கள் ஒலிபரப்பினர்.

இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் நிம்மதியாக அம்மனை தரிசனம் செய்ய முடியவில்லை. தேர்வுக்கும் மாணவ, மாணவியர்கள் தயாராக முடியவில்லை.

ஒருவாரமாக கோயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை. திருவிழா நடைபெறும் நாட்களில் கோயில் வாசலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் நிறுத்தப்படுவது வழக்கம், இந்தாண்டு அதுவும் இல்லை.

Advertisement