பவானிசாகர் பகுதி கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் உலா

பவானிசாகர்: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், பண்ணாரி அம்மன் உற்சவர், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பவானிசாகர் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா சென்றுள்ளது. தொட்டம்பாளையம் பகுதியில் மலைவாழ் மக்களின் பீனாட்சி வாத்தியம் முழங்க நேற்று உலா நடந்தது.

அப்போது நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், பண்ணாரி அம்மன் சப்பரம் செல்லும் சாலையில் நீண்ட வரிசையில் படுத்து அம்மனை வழிபட்டனர். அவர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டு அம்மன் சப்பரம் சென்றது. பல்வேறு கிராமங்களுக்கு சென்ற அம்மனை, வழி நெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement