நடுவானில் விமானம் டயர் வெடித்தது; சென்னையில் அவசர தரையிறக்கம்!

4


சென்னை: ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


ஜெய்ப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று (மார்ச் 30) அதிகாலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு, விமானி தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்தார். சென்னை வந்தடைந்த உடன், அவசர தரையிறக்கத்துக்கு அனுமதி அளிக்கும்படி கட்டுப்பாட்டு அறையில் கோரிக்கை வைத்தார். அவருக்கு அனுமதி வழங்கிய நிலையில், விமானம் அதிகாலை 5:46 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது.





முதற்கட்ட விசாரணையில் டயர் வெடித்து சேதமடைந்தது தெரியவந்தது. SG9046 விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்த நிலையில் சாதுரியமாகச் செயல்பட்ட விமானி அசம்பாவிதம் இன்றி விமானத்தைத் தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Advertisement