பீகாரில் லாலுவின் காட்டாட்சி வேண்டுமா, முன்னேற்றம் தரும் அரசு வேண்டுமா; அமித் ஷா பேச்சு

பாட்னா: பீகாரில் காட்டாட்சி வேண்டுமா அல்லது முன்னேற்றத்தை தரும் அரசு வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.



பீகாரில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார். அங்கு கூடிய விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.


இந் நிலையில் கோபால்கன்ஜ் பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;


பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. மாநிலத்தில் காட்டாட்சி வேண்டுமா அல்லது முன்னேற்றத்தை தரக்கூடிய பா.ஜ., அரசு வேண்டுமா? லாலு-ரப்ரியின் காட்டாட்சி வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.


கடந்த 65 ஆண்டுகளில் செய்யாததை பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் செய்திருக்கிறார். எனவே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளியுங்கள். 5 ஆண்டுகளில் வெள்ளத்தில் பாதிக்கப்படாத மாநிலமாக பீகாரை மாற்றுகிறோம்.


மாநிலத்தில் லாலு-ரப்ரியும், மத்தியில் சோனியா-மன்மோகனும் பீகாருக்கு எதுவுமே செய்யவில்லை. ஆனால், பீகார் வளர்ச்சிக்காக 9 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Advertisement