ஐதராபாத் பல்கலையில் மாணவர்கள் - போலீஸ் மோதல்; தெலுங்கானாவில் தொடரும் பதற்றம்

ஐதராபாத்: 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் தெலுங்கானா அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய ஐதராபாத் பல்கலை மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவத்திற்கு கண்டனம் எழுந்து வருகிறது.
தெலுங்கானாவில் ஐதராபாத் பல்கலை வளாகத்தை ஒட்டியுள்ள உள்ள 400 ஏக்கர் நிலத்தில் ஐ.டி., பார்க் அமைக்க ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நிலத்தை ஏலம் விடுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதற்கு பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி உள்பட ஐதராபாத் பல்கலை மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது எனக் கூறி, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த இடத்திற்கும், பல்கலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஜே.சி.பி., இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவதை அறிந்த மாணவர்கள், அங்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சொல்லியும் அவர்கள் கலைந்து போகவில்லை. இதனால் இருதரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்களை போலீசார் வலுக்கட்டயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தலைமுடியை பிடித்து இழுத்தும், அடித்தும், கைது செய்ததாக பி.ஆர்.எஸ்., கட்சி குற்றம்சாட்டியது. மேலும் காங்கிரஸ் அரசின் இந்த செயலுக்கு முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
இது குறித்து பி.ஆர்.எஸ்., கட்சி கூறுகையில், "பல மாணவிகளின் ஆடைகள் கிழிக்கப்பட்டன. இதனால், அவர்கள் கதறி அழுதனர். அப்படியிருந்தும் அவர்களை விடுவிக்காமல், கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டனர்.
ராகுல் ஒரு கையில் அரசியலமைப்பு பிடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார். அதே சமயத்தில் அவரது காங்கிரஸ் அரசாங்கம், அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

