மியான்மர் நிலநடுக்கம்; மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்!

13


பாங்காங்: மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது, 60 மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்துள்ளனர் என முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது.


நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மார்ச் 28ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மியான்மரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே நகரங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலநடுக்கத்தால் 2,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 1700க்கும் மேற்பட்டோர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, பல ஆயிரம் பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு, பலி எண்ணிக்கை பல மடங்கு உயரும் என, கணித்துள்ளது.



இந்நிலையில், இன்று (மார்ச் 31) மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது, 60 மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்துள்ளனர் என முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து மியான்மர் முஸ்லிம் அமைப்பை சேர்ந்த துன் கீ கூறியதாவது: நிலநடுக்கம் ஏற்பட்ட போது 60 மசூதிகள் சேதம் அடைந்தன.

அப்போது நாடு முழுவதும் பல்வேறு மசூதிகளில் வெள்ளிக் கிழமை தொழுகை நடந்தது. தொழுகையில் ஈடுபட்டு இருந்த 700 பேர் உயிரிழந்தனர். பழைய காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான மசூதிகள் மிகவும் சேதம் அடைந்தன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement