ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரம்ஜான் பண்டிகையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்கள், தங்களின் புனித ரம்ஜான் மாதத்தில், நோன்பை கடைப்பிடித்தனர்.

நிறைவாக ரம்ஜான் பண்டிகையான நேற்று ஏழை, எளியவர்களுக்கு நல உதவி செய்து, ஈகைப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

விழுப்புரம் நகராட்சி மைதானத்தில், காலை 7:30 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடந்த தொழுகையில் நிர்வாகிகள், முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர். இதே போல், கீழ்பெரும்பாக்கம் மஸ்ஜிதே முஹமதியா ஹதீஸ் பள்ளி வாசல், தக்கா தெரு பள்ளி வாசல், வடக்கு தெரு வாலாஜா பள்ளி வாசல், பாகர்ஷா வீதி பள்ளி வாசல், சாலாமேடு, வளவனுார், காணை, மாம்பழப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு தொழுகைகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மந்தக்கரை பள்ளி வாசலில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தொழுகை மேற்கொண்டார்.

தொடர்ந்து, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி, ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

விக்கிரவாண்டி



விக்கிரவாண்டி கீழ்மாட வீதியிலுள்ள ஜூம்மா பள்ளியில் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு, காலை 7.30 மணிக்கு அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். திருச்சி - சென்னை பைபாஸ் சாலை ஒயிட் மசூதி அருகே கபர்ஸ்தானில் சிராஜூதீன் தலைமையில் சிறப்பு தொழுகை செய்தனர். பின்னர் ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர். முண்டியம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி மசூதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

செஞ்சி



பள்ளிவாசலில் இருந்து ஜமாத் தலைவர் மஜீத் பாபு தலைமையில் ஊர்வலம் சென்று, செஞ்சி கூட்ரோட்டில் பிறை கொடி ஏற்றினர். தொடர்ந்து, செஞ்சிக்கோட்டை சாதுத்துல்லாகான் மசூதியில் ஊர்வலம் முடிவடைந்தது. அங்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். ஷமீம் அக்தர் தொழுகையை நடத்தினார்.

சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலை ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் மஸ்தான் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் மொக்தியார் உட்பட திராளானோர் தொழுகை நடத்தினர்.

பள்ளி வாசல் தலைவர்கள் ஹனீப், பட்டேல் கவுஸ் பாஷா, இப்ராஹிம், சையத் அமீன் பங்கேற்றனர்.

அவலுார்பேட்டை



அவலுார்பேட்டையில் நேற்று காலை 8:00 மணிக்கு மசூதியிலிருந்து ஜமாத்தினர் திரளாக ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சொற்பொழிவும், சிறப்பு தொழுகையும் நடந்தது.

Advertisement