புதுப்பொலிவுக்கு மாறும் மின் கட்டண மையங்கள்

1


சென்னை: ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா, 10 பிரிவு அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில், பழைய மின் சாதனங்களை அகற்றி, சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, புதுப்பொலிவுக்கு மாற்ற, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார்.


தமிழகம் முழுதும் மின் வாரியத்துக்கு, 2,850 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. பெரும்பாலானவற்றில் மின் கட்டண வசூல் மையங்களும், துணை மின் நிலையங்களும் உள்ளன. மின் வினியோக பணிகள், பிரிவு அலுவலகங்கள் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன.


எனவே, சேதமடைந்த மின் வினியோக பெட்டி, 'கேபிள்' உள்ளிட்ட சாதனங்களும், வீடுகளில் இருந்து கழற்றப்படும் குறைபாடு உடைய மீட்டர்கள் உள்ளிட்டவையும், பிரிவு அலுவலகங்களில் கண்டபடி வைக்கப்பட்டு உள்ளன.


மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால் பல அலுவலகங்கள், மின் கட்டண மையங்கள் துாசி படர்ந்து, கட்டடங்களில் விரிசல்களுடன் சேதமடைந்து காணப்படுகின்றன.


மின்வாரிய தலைவராக உள்ள ராதாகிருஷ்ணன், கூட்டுறவு துறை செயலராக இருந்தபோது, சேதமடைந்த ரேஷன் கடைகளை, புதுப்பொலிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தார்.


அதன்படி, 2,500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுக்கு மாறின. சர்வதேச தரச்சான்றுகளும் பெறப்பட்டன.


இதேபோல, பழைய மின் சாதனங்களை அப்புறப்படுத்தி, சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, மின் கட்டண மையம், பிரிவு அலுவலகம், துணை மின் நிலையத்தை புதுப்பொலிவுக்கு மாற்றுமாறு பொறியாளர்களுக்கு, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார்.


முதல் கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா, 10 அலுவலகங்கள், துணை மின் நிலையங்களை புதுப்பொலிவுக்கு மாற்றும் பணி துவங்கிஉள்ளது.


முதலாவதாக, சென்னை கொட்டிவாக்கம் துணை மின் நிலையத்தை புதுப்பொலிவுக்கு மாற்றும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பணிகளை, ஆறு மாதங்களில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement