தொழில் முனைவோர்  கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் தொழில் கடன் பெற்று, சுயமாக தொழில் துவங்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மாவட்டத்திற்கு சுய தொழில் துவங்க நீட்ஸ் திட்டத்தின் கீழ், 31 தொழில் திட்டங்களுக்கு மானியமாக 301.00 லட்சம் ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 22 தொழில் திட்டங்களுக்கு 1,019.67 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 251.38 லட்சம் ரூபாய் மானியமாக வங்கிகளால் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு சார்பில் நிலம், கட்டடம் மற்றும் இயந்திரம் உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியம் அதிகபட்சமாக 75 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 3 சதவீத பின்முனை வட்டி மானியம் கடன் திரும்ப செலுத்தும் காலம் வரையிலும் வழங்கப்படுகிறது.

நவீன அரிசி ஆலை, உலர் சாம்பல் செங்கல் உற்பத்தி, சோப் மற்றும் சோப் ஆயில் தயாரித்தல், யூ.பி.வி.சி., ஜன்னல்கள் உற்பத்தி போன்ற உற்பத்தி தொழில்கள் மற்றும் உணவகங்கள், கான்கிரீட் கலவை இயந்திரங்கள், வாகன பணிமனை, வீல் அலைன்மென்ட், பல் மருத்துவமனை, கண் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர்கள் போன்ற சேவைத் தொழில்களும் துவங்க கடன் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் தொழில் துவங்க www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விபரங்கள் பெறவும், கூடுதல் வழிகாட்டுதலுக்கும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரிலும் அல்லது 04151-294057 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தகுதியும், ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement