தமிழக நிதியை ஒடிசா, உ.பி.,க்கு நிர்மலா சீதாராமன் பிச்சை போடுகிறார்

1

சிங்கம்புணரி: தமிழகத்தில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரியை கொண்டு ஒடிசாவுக்கும், உ.பி., க்கும் நிர்மலா சீதாராமன் பிச்சை போடுகிறார் என ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பாரதி பேசியதாவது:

தமிழகத்தில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரியை கொண்டு ஒடிசாவுக்கும், உ.பி., க்கும் நிர்மலா சீதாராமன் பிச்சை போடுகிறார்.

எம்.ஜி.ஆர்., இருந்த போது பெண்களின் ஓட்டு தி.மு.க.,வுக்கு கிடைத்தது. அவர் வெளியேறிய பிறகு அனைத்து ஓட்டுக்களும் இரட்டை இலைக்கு போய் விட்டது. இப்போது பெண்களின் ஓட்டு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,விற்கு வந்துள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அமித்ஷா எதையும் செய்வார்.

ஆகையால் கட்சியினர் முக்கிய விஷயங்களை செல்போன்களில் பேசுவதை தவிர்த்து விடுங்கள். உட்கட்சி பிரச்னைகளை செல்போனில் பேசிக்கொள்ளாதீர்கள். அதை ரெக்கார்ட் செய்து கட்சியைப் பிளவுபடுத்த பார்ப்பார்கள்.

75 ஆண்டுகளாக பல தலைவர்கள் நம்மை எதிர்த்து பேசினார்கள். ஆனால் எதிர்த்துப் பேசிய அத்தனை பேரும் நமது மேடைக்கு தான் வந்தார்களே தவிர, நாம் அவர்கள் மேடைக்கு செல்லவில்லை.

அறிவாலயத்தை கைப்பற்றுவேன் என்று சொன்னவர் எல்லாம் தி.மு.க., வோடு செட்டில் ஆகிவிட்டனர். காமராஜர் இன்று உயிரோடு இருந்திருந்தால் தி.மு.க., வில் உறுப்பினர் ஆகியிருப்பார்.

17 மாதத்துக்கு முன்பு பிறந்த குழந்தை நமக்கு சவால் விடுகிறது. அது நமது கால் செருப்பு துாசிக்கு சமம்.

ஒரு தொகுதியில் இரண்டு முறைக்கு மேல் நின்றால் மக்கள் தோற்கடித்து விடுவார்கள் என்பதால் கருணாநிதியே தொகுதி மாறி தான் போட்டியிடுவார்.

ஆனால் பெரியகருப்பன் ஒரு தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றுள்ளார். எச். ராஜா எம்.எல்.ஏ., ஆகி பென்ஷன் வாங்குவது தி.மு.க., போட்ட பிச்சை. நம்மால் தான் அவர் எம்.எல்.ஏ., ஆனார், என்றார்.

Advertisement