குழந்தை வரம் அருளும் வேணுகோபால சுவாமி கோவில்

பெங்களூரு மல்லேஸ்வரம் 11வது கிராஸ் ரோட்டில் உள்ளது, ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணா சுவாமி கோவில். இந்த கோவில், 1902ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி திறக்கப்பட்டது.

கடந்த 1898ல் பிளேக் நோய் பெங்களூரு நகரில் பலரது உயிரை காவு வாங்கியது. அந்த நேரத்தில் சிறந்த சுகாதார வசதிகளுடன் கூடிய பல்வேறு குடியிருப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அப்படி உருவான பகுதிகளில் ஒன்றுதான் மல்லேஸ்வரம். இந்தப் பகுதியின் மேம்பாட்டுக்காக மைசூரு திவான் சேஷாத்ரி அய்யர் முக்கிய பங்கு வகித்தார்.

காடு மல்லேஸ்வரா



பிளேக் நோய் உருவான நேரத்தில் கட்டப்பட்டது தான் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணா சுவாமி கோவில். இந்த கோவில் கட்டப்படுவதற்கு முன்பே காடு மல்லேஸ்வரா, நந்தி தீர்த்த கோவில் அங்கு இருந்தது.

வேணு கோபால சுவாமி கோவில் உள்ள இடத்தில் விஷ்ணு கோவில் கட்டும் திட்டத்துடன், அப்போதைய மைசூரு மகாராணியை, மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சந்தித்துப் பேசினர். முதலில் நம்பி நாராயணா சாமி, கோவிலின் பிரதான தெய்வமாக வணங்க திட்டமிடப்பட்டது.

ஆனால் திவான் வெங்கடரங்கரின் கனவில் தோன்றி, வேணு கோபால சாமியை பிரதான தெய்வமாக வைக்குமாறு கூறியதால், வேணு கோபால சுவாமி பிரதான தெய்வம் ஆனார். இந்த கோவிலை கட்டுவதற்காக மைசூரு மன்னர் குடும்பத்தினர் 3,750 வராஹம் (தங்க நாணயம்) அளித்துள்ளனர். உள்ளூர் மக்கள் 11,794 தங்க நாணயங்கள் கொடுத்துள்ளனர்.

சோழர் ஆட்சிக் காலம்



இந்த கோவிலில் உள்ள தெய்வங்கள் தமிழகத்தின் திருக்கூடலூரில் உள்ள பாழடைந்த கோவிலை சேர்ந்தது. சோழர் ஆட்சிக் காலத்தில் வழிப்பட்டது என்றும் கருதுகின்றனர்.

தற்போது இந்த கோவிலில் ஏராளமான சுவாமி சிலைகள் உள்ளன. முக்கிய தெய்வமாக வேணுகோபால கிருஷ்ணா சுவாமி உள்ளார். கிருஷ்ணரை தரிசித்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தை பிறந்த பின்பு இங்கு வந்து எடைக்கு எடை துலாபாரம் கொடுக்கின்றனர்.

கோவிலுக்குள் நுழையும்போது கோபுரத்தில் துலாபாரம் கொடுப்பது போன்று அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பக்கம் கிருஷ்ணர் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு 123 ஆண்டுகள் வரலாறு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி, பிரம்ம உத்சவம் உள்ளிட்ட பண்டிகைகள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தினமும் காலை 7:30 முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

Advertisement