எத்னால் தனி கட்சி வெற்றி பெறாது!

கொப்பால்: ''பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பசனகவுடா பாட்டீல் எத்னால், புதிய கட்சியை துவக்கினால் வெற்றி பெற முடியாது,'' என, மாநில சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

எத்னாலின் அரசியல் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய விரும்பவில்லை. மாநிலத்தில் பல பெரிய தலைவர்கள், தனி கட்சி துவக்கினர். அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

எத்னால் காங்கிரசிலும் சேரமாட்டார். அவரின் கொள்கை, எங்கள் கட்சி கொள்கையுடன் ஒத்து வராது. அவர் வேண்டுமானால் ம.ஜ.த.,வுடன் சேருவது பற்றி ஆலோசிக்கட்டும். ஒருவேளை, அவர் தனி கட்சி துவக்கினால், வெற்றி பெற மாட்டார்.

'முடா' வழக்குக்கு பின், உடல் நலம் பாதிப்பு, பட்ஜெட் தாக்கல் உள்ளிட்ட காரணங்களால் முதல்வரால் புதுடில்லி செல்ல முடியவில்லை. தற்போது, அங்கு செல்லும் முதல்வர், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உட்பட மூத்த தலைவர்களை சந்திக்கிறார்.

பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்க உள்ளார். அவர் வந்த பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கை தெரியும். அமைச்சர் ராஜண்ணாவின் மகன் ராஜேந்திராவுக்கு கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement