டில்லியில் கர்நாடக பவன் முதல்வர் நாளை திறக்கிறார்

பெங்களூரு: டில்லியின் சாணக்யபுரி பகுதியில், புதிதாக கட்டப்பட்டுள்ள கர்நாடக பவன் கட்டடம் நாளை திறக்கப்படுகிறது. 'காவேரி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள கட்டடத்தை, முதல்வர் சித்தராமையா திறந்து வைக்கிறார்.

டில்லியின் சாணக்யபுரி பகுதியில், 62 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று மாடிகள் கொண்ட கர்நாடக பவன் கட்டப்பட்டிருந்தது. பழமையான இக்கட்டடம், பாதுகாப்பு அற்றது என, டில்லி முனிசிபல் கவுன்சில் அறிவித்தது. இந்த கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது.

முதலில் 82 கோடி ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டது. 2019ல் அன்றைய கூட்டணி அரசின் முதல்வர் குமாரசாமி, இந்த தொகையை 140 கோடி ரூபாயாக அதிகரித்தார். அடிக்கல் நாட்டும் முன்பே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ., அரசு அமைந்தது. அன்றைய முதல்வர் எடியூரப்பா, புதிய கர்நாடக பவன் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஐந்து மாடிகள் கொண்ட கர்நாடக பவன் கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. 'காவேரி' என்ற பெயர் சூட்டப்பட்ட கட்டட திறப்பு விழா, நாளை நடக்கிறது. முதல்வர் சித்தராமையா திறந்து வைக்கிறார்.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பிரஹலாத் ஜோஷி, குமாரசாமி, ஷோபா, சோமண்ணா, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் மஹாதேவப்பா, சதீஷ் ஜார்கிஹோளி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

'காவேரி' கர்நாடக பவன் கட்டடம், மாநில கவர்னர், முதல்வர், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட மற்ற வி.வி.ஐ.பி.,க்கள் தங்குவதற்கு சிறப்பு அறைகள் அடங்கியதாகும்.

Advertisement