உலகளாவிய அமைதிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்; பிரதமர் மோடி

5

புதுடில்லி: ''உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.


சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக வந்துள்ளார். டில்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா வரவேற்றார்.

டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: அதிபர் போரிக் இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்துள்ளார்.
இந்தியாவுடனான நட்பு மற்றும் உறவுகளை வலுப்படுத்த அவர் விரும்புகிறார். கனிமத்துறையில் உறவை வலுப்படுத்த விவாதம் நடத்தினோம்.


டிஜிட்டல், பொது உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரயில்வே, விண்வெளி மற்றும் பிற துறைகளில் சிலியுடன் இந்தியா இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது. போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளின் இடையே உறவை வலுப்படுத்த வேண்டும்.

உலகளாவிய ரீதியில், அனைத்து பதட்டங்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியாவும், சிலியும் ஒப்புக்கொள்கின்றன. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் பங்கு அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement