பட்டாபிராம் 'டைடல் பார்க்'கில் 6 நிறுவனங்கள் தொழில் துவக்கம் 

சென்னை, திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் உள்ள டைடல் பார்க்கில், கூடுதலாக ஆறு நிறுவனங்கள் தொழில் துவங்கியுள்ளன.

வடசென்னை மற்றும் திருவள்ளூரில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க, பட்டாபிராமில், 330 கோடி ரூபாய் செலவில், டைடல் பார்க் கட்டடத்தை, தமிழக அரசு அமைத்துள்ளது.

இதை, முதல்வர் ஸ்டாலின், 2024 நவம்பரில் துவக்கி வைத்தார். இந்த கட்டடத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், நவீன முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன.

டைடல் பார்க் கட்டடத்தை துவக்கி வைத்தபோது, 'வெப்பெராக்ஸ் சொல்யூஷன்ஸ், டாட்நிக்ஸ் டெக்னாலஜீஸ்' ஆகிய நிறுவனங்கள் தொழில் துவங்க ஆணைகள் வழங்கப்பட்டன.

அங்கு தற்போது, 'டாட் கோ வொர்க்கிங், ஜெம்கேப்ஸ் ஹெல்த்கேர், நேட்டிவ்யூட் டெக்னாலஜிஸ், ஆர் - சாப்ட், கிரெடிக்சா, டெலிபெர்பார்மென்ஸ்' ஆகிய ஆறு நிறுவனங்கள் தொழில்களை துவங்கியுள்ளன. இதனால், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

முக்கிய நகரங்களில் துவக்கப்பட்டுள்ள டைடல் பார்க் கட்டடங்களில், ஐ.டி., நிறுவனங்களை ஈர்த்து, தொழில் துவங்க வைக்கும் பணியில், டைடல் பார்க் மார்கெட்டிக் குழு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

இதனால், பட்டாபிராமில் டைடல் பார்க் துவக்கிய ஐந்து மாதங்களில், 20 சதவீத அலுவலக இடங்கள் நிரம்பிவிட்டன. மேலும், நிறுவனங்களை ஈர்க்கும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினர்.

***

Advertisement