நவீன துணை மின் நிலையம் நங்கநல்லுாரில் எதிர்பார்ப்பு

நங்கநல்லுார்,ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார் 100 அடி சாலையில், 33 கி.வோ., துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. அங்கிருந்து, நங்கநல்லுார், பழவந்தாங்கல், மூவரசம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில், மின் நுகர்வோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மின் சாதனப் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நங்கநல்லுாரில் உள்ள 33 கி.வோ., துணை மின் நிலையத்தை, 110 கி.வோ., துணை மின் நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது. அது குறித்த திட்டத்தை செயல்படுத்த மின் வாரியம் முயற்சித்தது.

பழைய தொழில்நுட்பத்தின்படி, 110 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்க, குறைந்த பட்சம், 10 கிரவுண்டு இடம் தேவைப்படுகிறது. உரிய இடம் கிடைக்காததால், இத்திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இடப்பிரச்னைக்கு தீர்வாக, நவீன தொழில்நுட்பமான ஜி.ஐ.எஸ்., எனப்படும், 'காஸ் இன்ஸ்சுலேட்டட் சப் - ஸ்டேஷன்' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

நங்கநல்லுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அடிக்கடி மின் வினியோகப் பிரச்னைகள் எழுந்து வருகின்றன.

நங்கநல்லுாரில், ஜி.ஐ.எஸ்., எனும் ஜெர்மன் தொழில்நுட்பத்தின்படி, துணை மின் நிலையம் அமைக்க, மூன்று கிரவுண்டு இருந்தால் மட்டும் போதுமானது.

ஜி.ஐ.எஸ்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் துணை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதே முறையில், நங்கநல்லுாரிலும் நவீன துணை மின் நிலையம் அமைக்கப்படும் என, தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான அன்பரசன், கடந்த ஆண்டு இறுதியில் கூறியிருந்தார். எனவே, இது குறித்து அமைச்சரும், மின் வாரியமும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement