ரூ.110 கோடியில் குரோம்பேட்டையில் மாவட்ட மருத்துவமனை கட்டடம் ரெடி பல், மறுவாழ்வு மருத்துவமனையாக மாறும் பழைய கட்டடம்

குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியத்தில், 110 கோடி ரூபாய் மதிப்பில், மாவட்ட மருத்துவமனை கட்டட பணிகள் முடிந்து, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இதனால், தாலுகா மருத்துவமனை இயங்கி வந்த கட்டடம், விரிவுபடுத்தப்பட்ட பல் மற்றும் மறுவாழ்வு மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.
குரோம்பேட்டையில், ஜி. எஸ். டி., சாலையை ஒட்டி, அரசு தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது.
புறநகரில் உள்ள ஒரே அரசு மருத்துவமனை இதுவாகும். இதைவிட்டால், செங்கல்பட்டு அல்லது சென்னைக்கு தான் செல்ல வேண்டும்.
இம்மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம், 2021, அக்டோபரில் அனுமதி வழங்கியது. தொடர்ந்து, இம்மருத்துவமனையை நவீனமயமாக்க, 110 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.
இதற்காக, தாம்பரம் சானடோரியத்தில், சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 2023, பிப்ரவரி மாதம், முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் துறையின் தடையில்லா சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், 2023, ஆகஸ்ட் மாதம் பணிகள் துவங்கின.
தற்போது பணிகள் முடிந்து, மாவட்ட மருத்துவமனை கட்டடம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இம்மாதம் இறுதியில் திறக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின், தற்போது இயங்கி வரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும்.
அதே நேரத்தில், பழைய கட்டடம், விரிவுபடுத்தப்பட்ட பல் மற்றும் மறுவாழ்வு மருத்துவமனையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
புறநகரை பொறுத்தவரை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், பல் மருத்துவ பிரிவு இருந்தாலும், அதில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றுகிறார்.
ஏதாவது பெரிய பிரச்னை என்றால், செங்கல்பட்டு மற்றும் சென்னைக்கு தான் செல்ல வேண்டும். இதை கருத்தில் கொண்டே, 'மல்டி பெஷாலிட்டி' பல் மருத்துவமனை அமைகிறது.
விரிவுபடுத்தப்பட்ட பல் மருத்துவமனையில், போதிய உபகரணங்கள், ஆறு மருத்துவ பிரிவுகள், 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போன்ற வசதி இருக்கும்.
அதேபோல், போதிய மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் 30 படுக்கை வசதிகளுடன் மறுவாழ்வு மருத்துவமனை அமைகிறது.
இதனால், பொதுமக்கள் இனி வரும் காலங்களில், குரோம்பேட்டையிலேயே அனைத்து மருத்துவ வசதிகளையும் பெறலாம்.
மேலும்
-
இந்திய என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி வழங்க குறுக்கு வழி! சோரஸ் அறக்கட்டளை தில்லாலங்கடி அம்பலம்
-
வக்ப் அமைப்புகளை பாதுகாப்பதில் தனி கவனம் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
-
பெரம்பலுாரில் மாணவியரை கடித்த விடுதி சமையலர் கைது
-
ஊட்டி, கொடைக்கானலில் 'புனிகுலர்' ரயில் இயக்க ஆய்வு
-
அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை
-
காரைக்குடியில் திருமண மண்டபம் எம்.எல்.ஏ., கோரிக்கை