போலீஸ் பாதுகாப்புடன் சரக்கு ஏட்டு அதிரடியாக துாக்கியடிப்பு

திருச்சி:அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்திய நண்பர்களுடன் நின்றிருந்த போலீஸ் ஏட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

திருச்சி மாவட்டம், காட்டூர் அரசுப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு, ஆறு பேர் உட்கார்ந்து மது அருந்தி, பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இதுகுறித்து, இந்திய மாணவர் சங்கத்தினர், திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் அங்கு சென்றபோது, இருவர் தப்பியோடினர். மீத நால்வரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர்கள் மகேஸ்வரன், 42, வினோத், 41, ரயில்வே ஊழியர் பிரபு, 41, மணிகண்டம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு இளையராஜா என, தெரிய வந்தது.

அவர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் மூச்சு பகுப்பாய்வு சோதனை செய்யப்பட்டது. இதில், பிரபு, மகேஸ்வரன் மது அருந்தி இருந்ததாகவும், வினோத், இளையராஜா மது அருந்தவில்லை என தெரிய வந்ததாக கூறிய போலீசார், பிரபு, மகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து ஜாமினில் விடுவித்தனர். வினோத், இளையராஜாவை அனுப்பினர்.

இந்நிலையில், இளையராஜா மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அதில், பள்ளி வளாகத்தில் மது அருந்திய நண்பர்களுக்கு பாதுகாப்பாக நின்றதால், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, திருச்சி எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement