பங்குனி உத்திரம், சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை நேற்று திறப்பு இன்று காலை கொடியேற்றம்

சபரிமலை:பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.

நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி அருண் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 6:30 மணிக்கு சன்னிதானம் முன்புறமுள்ள மண்டபத்தில் கொடி பட்டத்துக்கான பூஜைகளை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் அபிஷேகம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். காலை 9:45 முதல் 10:45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். நாளை முதல் ஒன்பதாம் நாள் விழாவான ஏப்.10 வரை மதியம் உற்சவ பலி நடைபெறும். ஏப்.10 இரவு சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், ஏப். 11மதியம் பம்பையில் ஆராட்டும் நடைபெறும். அன்று இரவு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.

ஏப். 12 முதல் சித்திரை விசு பூஜைகள் நடைபெறும். ஏப். 14 - காலையில் சித்திரை விஷுவையொட்டி கனி காணும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்குதலும் நடைபெறுகிறது. ஏப்.18 வரை பூஜைகள் நடைபெற்று அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Advertisement