'தமிழக போலீஸ் நள்ளிரவில் சோதனை நடத்தியது இல்லையா?'

'டாஸ்மாக்' அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''டாஸ்மாக் அலுவலகத்தில், 60 மணி நேரம் வரை சோதனை நடத்தி, பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறைபிடித்துள்ளனர். இது, மனித உரிமை மீறல். அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவுக்கு, பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'தமிழக காவல் துறை நள்ளிரவில் சோதனை நடத்தியது இல்லையா?' என்று, கேள்வி எழுப்பினர். அதற்கு, 'நள்ளிரவில் சோதனை நடத்தியது இல்லை' என, அட்வகேட் ஜெனரல் பதிலளித்தார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜீ, ''தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல,'' என்றார்.

இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை, வரும் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆஜராகி, ''டாஸ்மாக் துறையை வைத்திருக்கும் அமைச்சரின் வழக்கறிஞர், தற்போது, இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதிபதி ஒருவரின் சகோதரர். எனவே, இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்கக் கூடாது,'' என்று முறையீடு செய்தார்.

இந்த முறையீட்டை, நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

Advertisement