பிரதமர் வருகை: பாம்பன் ரயில் பாலத்தை ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் ஆய்வு

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு ஏப்.,6ல் பிரதமர் மோடி வருவதையொட்டி நேற்று ராமேஸ்வரம் பாம்பனில் தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் ஆய்வு செய்தார்.

பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் பிரதமர் மோடி திறக்க உள்ளார். இதற்கான விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம், போலீஸ் துறை செய்து வருகின்றன.

மண்டபத்தில் ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி வந்திறங்கி காரில் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் வருகிறார். அங்கிருந்து பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்து விட்டு ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தமிழ்நாடு அரசு தங்கும் விடுதி வளாகத்தில் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

நேற்று ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வந்த தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், பிளாட்பார பணிகள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

பின் பிரதமர் பங்கேற்கும் விழா மேடை, பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்தார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா, ரயில்வே பாதுகாப்பு படை சீனியர் எஸ்.பி.,செந்தில்குமரன் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இலங்கையிலிருந்து பிரதமர் மோடியை அழைத்து வர ஹெலிகாப்டர்கள்




உச்சிப்புளி: பிரதமர் மோடி ஏப்., 4 , 5 ல் இலங்கை நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அங்கிருந்து ஏப்.,6ல் ெஹலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.


இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக கோவை மாவட்டம் சூலுார் விமானப்படை தளத்திற்கு சொந்தமான எம்.ஐ.17 ரக ெஹலிகாப்டர்கள் நேற்று காலை 10:00 மணிக்கு உச்சிப்புளி கடற்படை விமானதளத்தில் இருந்து புறப்பட்டு இலங்கை காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றன.அங்கிருந்து ஏப்.,6 ல் நான்கு ஹெலிகாப்டர்களும் காலை 8 :00 மணிக்கு புறப்பட்டு அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து 10:40 மணிக்கு பிரதமர் மோடியை அழைத்துக்கொண்டு 11:40 மணிக்கு மண்டம் வரும்.


இவற்றில் 3 ஹெலிகாப்டர்கள் மண்டபத்திற்கும், ஒரு ஹெலிகாப்டர் உச்சிப்புளி கடற்படை தளத்திற்கும் செல்லவுள்ளன. ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.

Advertisement