'டிஜிட்டல் அரெஸ்ட்' என மிரட்டி மோசடி செய்த டாக்டர் கைது

தாம்பரம், தாம்பரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 52. கடந்த பிப்., மாதம், இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட சிலர், மும்பை போலீஸ் என அறிமுகமாகி, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்வதாக மிரட்டி 50 லட்சம் ரூபாயை, ஆன்லைன் வாயிலாக பறித்தனர்.

அதேபோல், பள்ளிக்கரணையை சேர்ந்த சரத், 32, என்பவரிடம், பங்குசந்தை வாயிலாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தையை கூறி, 1.97 லட்சம் ரூபாயை ஏமாற்றியது.

மேற்கண்ட இருவர் புகார் குறித்தும், தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.

அதில், டில்லியைச் சேர்ந்த பிரின்ஸ் பிரகாஷ் என்ற ராயிஸ், 25, மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார், அந்த கும்பலைச் சேர்ந்த ஆறு பேரை, ஏற்கனவே கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பிரின்ஸ் பிரகாஷ் என்பவரை, 25, சமீபத்தில் கைது செய்தனர். இவரிடமிருந்து 15 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பிரின்ஸ் பிரகாஷ் டாக்டர் என்பதும், 'டிஜிட்டல் அரெஸ்ட்' சம்பந்தமாக, கேரளா ஹோட்டல் தொழில் அதிபரை மிரட்டி 29.91 லட்சம் பறித்த வழக்கில் ஏற்கனவே கைதானதும் தெரிந்தது.

Advertisement