சஷ்டியையொட்டி மண் சோறுசாப்பிட்ட பக்தர்கள்


சஷ்டியையொட்டி மண் சோறுசாப்பிட்ட பக்தர்கள்


சேந்தமங்கலம்:சேந்தமங்கலம், தத்தகிரி முருகன் கோவிலில் சஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜை செய்ததுடன், ஏராளமானோர் மண் சோறு சாப்பிட்டனர்.
சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற தத்தகிரி முருகன் கோவில் உள்ளது. நேற்று பங்குனி மாத சஷ்டி விழா இங்கு கொண்டாடப்பட்டது. காலையில் முருகருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தத்தகிரி முருகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், 200க்கும் மேற்பட்டோர் மண் சோறு சாப்பிட்டனர். பக்தர்களுக்கு சஷ்டி விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
* ப.வேலுார் சுல்தான்பேட்டையில் உள்ள, பகவதி அம்மன் கோவிலில், சஷ்டியை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதர் கோவிலில் சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனுார் பச்சைமலை முருகன் கோவில்களில், சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
* அனிச்சம்பாளையம் சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்மலை முருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பிராந்தகத்தில் எழுந்தருளியுள்ள, 34 அடி உயரம் கொண்ட ஆறுமுக கடவுள் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அபிஷேக, ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Advertisement