அரசு விழாவுக்கு கட்டாய வசூல்: டாக்டரின் புலம்பல் ஆடியோ 'லீக்'

5

தென்காசி: தென்காசியில் ஏப்., 11ல் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்கும் அரசு விழாவிற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களிடம் தலா பத்தாயிரம் ரூபாய் கட்டாய வசூல் நடப்பது குறித்து டாக்டரின் புலம்பல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி மாவட்டத்திற்கு ஏப்., 11ம் தேதி இலத்தூர் பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா மற்றும் பல்வேறு அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தர உள்ளதாக தெரிகிறது.


இந்நிலையில் அமைச்சர் வருகையை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு உயர் அதிகாரிகள் வாயிலாக வாட்ஸ் அப் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் வரும் ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை இருக்கின்ற நிலையிலும் அமைச்சர் வருகின்ற காரணத்தினால் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமைச்சர் வருகை முன்னிட்டு விழா ஏற்பாடு, மேடை அமைக்கும் பணிகள் என பல்வேறு செயல்பாட்டிற்காக, ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களிடம் தலா பத்தாயிரம் ரூபாய் கட்டாய வசூல் நடப்பது குறித்து டாக்டரின் புலம்பல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அந்த ஆடியோவில், 'அமைச்சர் வருகைக்காக ரூபாய் 10 ஆயிரம் கேட்கிறார்கள். இனி வரும் காலத்தில் முதல்வர் வரும் பொழுது ரூ.20ஆயிரம் தருமாறு கேட்டால் எப்படி பணிபுரிவது. எங்களுக்கு பணி புரிவதற்கு இஷ்டமில்லை. மிகுந்த மன உளைச்சலாக உள்ளது என கூறியுள்ளார்.

Advertisement