புதுச்சேரியில் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை காலம் துவங்கியதை அடுத்து, கடந்த மாதம் இறுதி வாரத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் சுட்டெரித்தது. இதனால், மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். மாலை நேரத்தில், கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் சென்றனர். சுற்றுலா இடங்களில், சுற்றுலா பயணிகள் குறைவாகவே காணப்பட்டனர். மக்கள் அதிகமாக வரும் கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமாரி பகுதியில் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதையடுத்து, புதுச்சேரியில் நேற்று அதிகாலை 3:00 மணியில் இருந்தே மாலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது. அதனால் சாலையில் மழைநீர் ஓடியது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மழையில் நனைந்தபடியே சென்றனர். பகல் நேரத்தில், வானம் மேகமூட்டத்துடன், குளிர்ந்த நிலையில் இருந்ததால், கோடை வெப்பம் தணிந்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement