தமிழக முக்கிய கோயில்களில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: ஆன்லைன் தரிசன புக்கிங் குறித்து விழிப்புணர்வு குறைவு

7

மதுரை : தமிழக அறநிலையத்துறையின்கீழ் உள்ள முக்கிய கோயில்களில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கவும், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவும் ஆன்லைன் தரிசன புக்கிங் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.



இத்துறையின்கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் மதுரை, ராமேஸ்வரம், திருச்சி, திருச்செந்துார், சமயபுரம், பழநி, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் சமீபகாலமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. கூட்டநெரிசலால் ராமேஸ்வரம், திருச்செந்துாரில் பக்தர்கள் மயக்கம், இறப்பு என அடுத்தடுத்து சர்ச்சை ஏற்பட்டது. சமாளிக்க முடியாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் சொல்லியே ஓய்ந்து போயினர்.


இதை தவிர்க்க ஆன்லைன் தரிசன டிக்கெட் வசதி குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திருப்பதியில் தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது போல், தமிழக முக்கிய கோயில்களுக்கும் இசேவை மையம், தகவல் மையங்கள் மூலம் பக்தர்கள் 'புக்கிங்' செய்யும் வசதியை ஏற்படுத்தலாம்.

தற்போது அறநிலையத்துறை இணையதளம் வழியாக சம்பந்தப்பட்ட கோயில் இணையதளத்திற்கு சென்று முன்கூட்டியே தரிசனம் செய்ய 'புக்கிங்' செய்யும் வசதி உள்ளது. ஆனால் 95 சதவீதம் பேருக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், நீண்டநேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் காலதாமதமும், உடல் சோர்வும் தான் ஏற்படுகிறது.


தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறித்து கோயில் முன்பும், அது சார்ந்த இடங்களிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கலாம். ஆன்லைனில் பதிவு செய்யும்போது குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என முன்கூட்டியே கோயில் நிர்வாகத்திற்கு தெரிந்துவிடும்(சபரிமலையில் உள்ளது போல) என்பதால் அதற்கேற்ப ஏற்பாடுகளை அறநிலையத்துறை பிரத்யேகமாக செய்ய முடியும். இதுகுறித்து அறநிலையத்துறை பரிசீலிக்க வேண்டும்.

Advertisement