‛இளமை எனும் பூங்காற்று...' புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்

சென்னை: மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரவிக்குமார், 71 உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.


ரவிக்குமாரின் பூர்வீகம் கேரள மாநிலம், திருச்சூர். ஆனால் இவர் பிறந்தது சென்னையில் தான். மலையாளத்தில் லக்ஷபிரபு என்ற படத்தில் சிறு வேடத்தில் தோன்றினார். அதன்பின் மலையாளத்தில் பல படங்களில் ஹீரோ, குணச்சித்ர வேடங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழில் பாலசந்தர் இயக்கிய அவர்கள் படத்தின் மூலம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சுஜாதா ஆகியோர் உடன் இணைந்து நடித்து தமிழில் நடிகராக அறிமுகமானார்.


பகலில் ஓர் இரவு படத்தில் நடித்து இன்னும் பிரபலமானார். அந்த படத்தில் வரும் இளமை எனும் பூங்காற்று பாடல் இவரை பேச வைத்தது. தொடர்ந்து தமிழில் மலபார் போலீஸ், ரிஷி, ரமணா, லேசா லேசா, சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார். சினிமா தவிர்த்து ராதிகாவின் சித்தி, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி போன்ற பல டிவி தொடர்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகராக வலம் வந்தார்.


40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் இருந்து வந்த ரவிக்குமார் உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(ஏப்., 4) அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. ரவிக்குமார் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை இறுதிச்சடங்கு நடக்கிறது.

Advertisement