ஆய்வு நடத்தாமல் திரும்பியது ஏன்? 'பிலால்' சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்!

1

சென்னை, சென்னை, அண்ணா சாலையில் உள்ள 'பிலால்' ஹோட்டலில், ஷவர்மா, பிரியாணி சாப்பிட்ட சிலரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து புகாரை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் நேற்று முன்தினம், பிலால் ஹோட்டலில் ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது அவருக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஆய்வு செய்யாமல் திரும்பியது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, சதீஷ்குமார் வெளியிட்டுள்ள விளக்க பதிவில் கூறியிருப்பதாவது:

எனக்கு, ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், தர்பூசணி குறித்து மக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தை அகற்றும் விதமாக, நேற்று முன்தினம் செய்முறை விளக்கம் அளித்திருந்தேன்.

அதை முடித்துவிட்டு, காரில் சென்று கொண்டிருந்தபோது, நந்தனம் சிக்னல் அருகே திடீரென படபடப்பு ஏற்பட்டது. ஹோட்டல் அருகே வரும்போது, மயக்கம் ஏற்பட்டது.

அப்போது, எந்த மருத்துவமனைக்கு செல்ல போகிறேன் என்பதை, மொபைல் போனில் என் மனைவியிடம் தெரிவித்தேன்.

அவற்றை தவறாக திரித்து, மேலிடத்தில் இருந்து எனக்கு போன் வந்ததும், ஹோட்டலை ஆய்வு செய்யாமல் தப்பித்து ஓடுவது போலவும் சித்தரித்து, செய்திகள் பரப்பப்பட்டு உள்ளது.

இது எனக்கு, மன வேதனை அளிக்கிறது. என் கடமையில் இருந்து தவறவில்லை. யாருடைய மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன்.

பிலால் ஹோட்டலை ஆய்வு செய்வது பெரிய வேலையில்லை. என் உடல்நிலை ஒத்துழைக்காததால் திரும்பி செல்ல நேரிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement