தொழிலதிபர்களை அரசியல்வாதிகளாக்க மன்மோகன் சிங் பெயரில் புதிய திட்டம்

9

புதுடில்லி : ஆண்டுதோறும் 50 தொழிலதிபர்களை தேர்வு செய்து அரசியல்வாதிகளாக்கும்
வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரில் திட்டம் ஒன்றை காங்., அறிமுகப்படுத்தி உள்ளது.


தொடர்ச்சியாக மூன்று லோக்சபா தேர்தல்களில் தோல்வியடைந்ததோடு, முதன் முறையாக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல், மத்தியில் ஆட்சி அதிகாரத்தை காங்., பறிகொடுத்து நிற்கிறது.

தொடர் பயிற்சி



இந்நிலையில், கட்சியை வலுப்படுத்துவற்காக பல்வேறு முயற்சிகளை காங்., மேலிடம் மேற்கொண்டு வருகிறது. நீண்ட காலத்துக்குப் பின், மாவட்ட காங்., தலைவர்களின் கூட்டத்தையும் கூட்டியது.


இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழிலதிபராக இருப்பவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்து அரசியல்வாதியாக்கும் திட்டத்தை அறிவித்துஉள்ளது.


இது தொடர்பாக கட்சியின் எஸ்.சி., பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜு, ஊடகத்துறை தலைவர் பவன் கெரா, வர்த்தக காங்., தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர், டில்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:



தொழிலதிபர்களை அரசியலுக்கு அழைத்து வரும் வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரிலான திட்டத்தை கட்சி அறிமுகப்படுத்துகிறது.


அதன்படி, தொழில்துறையில் குறைந்தது, 10 ஆண்டுகளாக செயல்படுபவர்களில் இருந்து, ஆண்டுதோறும் 50 பேரை கட்சியின் குழு தேர்வு செய்யும்.


அவர்களுக்கு, காங்கிரசுக்குள் தொழில்முறை பின்னணி கொண்ட மூத்த தலைவர்கள் பயிற்சி அளிப்பர்.

தீவிர தொடர் பயிற்சிக்குப் பின், காங்., கட்சிக்குள்ளேயே பணிகள், திட்டங்களில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

நீண்ட துாரம்



தொழில்துறையில் சாதிக்கும், இது போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

இந்த முயற்சி, மற்ற கட்சிகளை விட காங்.,கை தனித்துவமாக்குவதோடு, நீண்ட துாரம் அழைத்துச் செல்லும் என நம்புகிறோம்.


இன்றைய அரசியலுக்கு பல்வேறு துறைகளின் அறிவும் தேவை. அரசியல் தலைவர்களாக இருப்போர், சட்டசபையிலோ, பார்லிமென்டிலோ மசோதாக்களை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், இதுபோன்ற நுணுக்கங்களையும் அறிவது அவசியம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement