மாவட்ட தொழில் மையங்களில் பொது மேலாளர் பணியிடங்கள் காலி தமிழகத்தில் திட்டப்பணிகள் பாதிப்பு

விருதுநகர்:தமிழகத்தில் உள்ள, மாவட்ட தொழில் மையங்களில், பொதுமேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், வளர்ச்சி திட்டப் பணிகளில் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், மாவட்ட தொழில் மையங்கள் உள்ளன. அந்தந்த பகுதிகளில், சாதகமான தொழில்களை கண்டறிவது, திட்ட அறிக்கைகளை தயாரிப்பது, அரசு ஒப்புதல்களை பெற்று தருவது, உரிமங்கள் பெற உதவுவது என, தொழில் முனைவோருக்கு இம்மையங்கள் உதவுகின்றன.

பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்றவை மூலம் தொழில் முனைவோருக்கு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளதால், கூடுதல் பொறுப்புகளை, பொதுமேலாளர்கள் கவனித்து வருகின்றனர். மூன்றில் ஒரு பங்கு காலிப்பணியிடங்கள் உள்ளன.

ஒருசில மாவட்டங்களில், இளம் அலுவலர்களை, பொது மேலாளர்களாக நியமிக்கின்றனர். போதிய அனுபவமின்றி, கடனுதவிகளை வழங்குவதில் கூர்ந்தாய்வு செய்ய முடியாமல் இவர்கள் தவிக்கின்றனர். இதனால் வளர்ச்சி திட்டப்பணிகளை முழுமையாக செயல்படுத்த முடிவதில்லை.

பொது மேலாளர் காலிப்பணியிடங்கள் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், கைவினைஞர் திட்டத்தையும், முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், அடுத்த மாதம், மேலும் பல பொது மேலாளர்கள், ஓய்வு பெற உள்ளதால், காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, தொழில் முனைவோரை ஊக்குவிக்க, மாவட்ட தொழில் மையங்களில், பொது மேலாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப, அரசு முன்வர வேண்டும்.

Advertisement