தமிழக மீனவர்கள் 14 பேரை விடுவித்தது இலங்கை

கொழும்பு: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு விடுவித்தது.
இலங்கைக்கு பிரதமர் மோடி சென்று இருந்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பில் நடந்த நிகழ்ச்சியில், அதிபர் அநுரா குமார திசநாயகேவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது மீனவர்கள் பிரச்னைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சு நடத்தினார்.
அதுமட்டுமின்றி, அவர் இலங்கைக்கு இந்திய அரசு உறுதுணையோடு இருக்கும் என உறுதி அளித்தார். மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்தார். இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார்.
மேலும், அவர் 'மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றார். இலங்கை பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி கிளம்பினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு விடுவித்தது. இவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து விரைவாக நடந்து வருகிறது.





