தமிழக அரசு அக்கறை செலுத்துமா? கைத்தறி நெசவாளர்கள் ஆதங்கம்

பல்லடம்; ''மத்திய அரசு காப்பீடு திட்டங்களை மாநில அரசு கைத்தறி நெசவாளர்களுக்காக செயல்படுத்த அக்கறை காட்ட வேண்டும்'' என்று கோரிக் கை எழுந்துள்ளது.

கோவை மண்டல பாரதிய மஸ்துார் கைத்தறி நெசவாளர் சங்கப் பொதுச் செயலாளர் நடராஜன் கூறியதாவது:

நவீன தறிகளின் வருகையாலும், கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை இதர தறிகளில் உற்பத்தி செய்வதாலும், கைத்தறி நெசவுத் தொழில் நலிவடைந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள், கைத்தறி துறையை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும். பங்கர் பீமா - கைத்தறி நெசவாளர்களுக்கான காப்பீடு திட்டம், ஜீவன் ஜோதி பீமா - ஆயுள் காப்பீடு திட்டம், சுரக் ஷா பீமா - விபத்து காப்பீடு திட்டம் உள்ளிட்டவற்றால் கைத்தறி நெசவாளர்கள் பயன் பெற முடியும்.

மத்திய அரசு கொண்டு வந்த இத்திட்டங்களால், பாதிக்கப்படும் நெசவாளர் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்கும்.

நெசவாளர் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய ஜவுளி அமைச்சகம் இதற்கான நிதி உதவியை வழங்கி வருகிறது. இத்திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழக அரசு சுணக்கம் காட்டுகிறது.

கைத்தறி சொசைட்டிகள் இவற்றை செயல்படுத்த மறுக்கின்றன. குறைந்த வருவாய் கொண்டு குடும்பம் நடத்தி வரும் நெசவாளர்களுக்கு இத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டால் பயனளிக்கும்.

குறைதீர் கூட்டம் நடத்தப்படுமா?



நெசவாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, கைத்தறி தொழிலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு குறை தீர்ப்பு கூட்டம் நடப்பது போல், கைத்தறி நெசவாளர்களுக்கும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானிய சோலார் மின் உற்பத்தி திட்டத்தை கைத்தறிக்கும் செயல் படுத்த வேண்டும்.

வாரம் ஒருமுறை அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தினாலும், இது நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை.

இதை முறையாக தமிழக அரசு செயல்படுத்தினால், கைத்தறி ஆடை உற்பத்தி பெருகுவதோடு, நெசவாளர் குடும்பங்களும் மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement