ஆயாக்களுக்கு அவ்ளோ தான் கைவிரித்தார் அமைச்சர் மா.சு.,

சென்னை : ''ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும், மகப்பேறு உதவியாளர்களான ஆயாக்களுக்கான ஊதியத்தை உயர்த்த வாய்ப்பில்லை,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கைவிரித்துள்ளார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - வில்வநாதன்: ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியாங்குப்பம், வெங்கடசமுத்திரம் ஆகிய இடங்களில் போதிய இடவசதி உள்ளது. அங்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டி தர வேண்டும்.

வேலுார் மாவட்டம் அகரஞ்சேரி, அக்ரஹாரம் ஊராட்சியில், ஊராட்சி கட்டடங்களில் துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு புதிய கட்டடங்கள் கட்டி தர வேண்டும்.

அமைச்சர் சுப்பிரமணியன்: ஆம்பூர் தொகுதியில், 28 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், ஐந்து துணை சுகாதார நிலையங்கள், இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆயுஷ் நல்வாழ்வு மைய கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

எதிர்காலத்தில், எம்.எல்.ஏ., கேட்கும் கட்டடங்களை கட்ட, தொகுதி நிதியை தந்து அவர் உதவ வேண்டும்.

ம.ம.க., - ஜவாஹிருல்லா: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதி அம்மாபேட்டை வட்டாரத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு சொந்த கட்டடம் கட்ட, 1996ம் ஆண்டே மக்கள் நிலத்தை தானமாக வழங்கி உள்ளனர். அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படவில்லை.

அமைச்சர் சுப்பிரமணியன்: தமிழகத்தில் உள்ள 8,713 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,500 வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. தானமாக கொடுக்கப்பட்ட இடத்தில், முன்னுரிமை அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தரப்படும்.

அ.தி.மு.க., - ரவி: ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஆயா என்று அழைக்கப்படும் மகப்பேறு உதவியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம், 1,500 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. சிறப்பாக மகப்பேறு பெற உதவிகள் செய்யும் ஆயாக்களுக்கு கருணை பார்வையுடன், ஊதியத்தை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

அமைச்சர் சுப்பிரமணியன்: ஆரம்ப சுகாதார நிலையங்களில், மாதம் இரண்டு, மூன்று பிரசவங்கள் மட்டுமே நடக்கின்றன. ஆயாவிற்கு வேலை எவ்வளவு நேரம் இருக்கும் என்பது எம்.எல்.ஏ.,விற்கு தெரியும். தமிழகம் முழுதும் இந்த நிலை உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement