பீஹாரில் ராகுல் பாதயாத்திரை; காங்., கட்சியினர் மோதல்

1



பாட்னா : பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.


இந்நிலையில், நேற்று பீஹார் வந்த காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, மாநில காங்., தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட கட்சியினர் வரவேற்றனர். இதையடுத்து, பெகுசாரி மாவட்டத்துக்கு ராகுல் சென்றார். அங்கு, 'புலம் பெயர்வதை நிறுத்து; வேலை கொடு' என்ற பெயரில், வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து, பாதயாத்திரையில் பங்கேற்றார்.

யாத்திரையை தொடர்ந்து பாட்னாவில், காங்., தலைமை அலுவலகத்துக்கு ராகுல் சென்று, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அவர், அங்கிருந்து புறப்பட்டதும் இரண்டு கோஷ்டிகளுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

கட்சி அலுவலகத்தில் இருந்த காங்., - -எம்.பி., அகிலேஷ் பிரசாத் முன்பாகவே, கட்சியினர் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். கோபமடைந்த அவர், சண்டை போட்டவர்களில் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

'தவறுகளில் இருந்து பாடம் கற்போம்'

பீஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று 'அரசியலமைப்பை காப்போம்' என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:ஆர்வத்துடன் பணியாற்றவில்லை என்பதை, காங்.,கில் ஒப்புக் கொள்ளும் முதல் ஆளாக நான் இருக்கிறேன். நம் தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னேறுவோம். முன்பு மாவட்ட காங்., தலைவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் உயர் ஜாதியினர். தற்போது, மூன்றில் இரண்டு பங்கு தலித் தலைவர்கள் உள்ளனர். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு, பா.ஜ., எதிர்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement