ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப் சிறப்பான பந்துவீச்சு: லக்னோ அணி வெற்றி

கோல்கட்டா: ஷர்துல் தாக்குர் மற்றும் ஆகாஷ் தீப் சிறப்பான பந்துவீச்சால் லக்னோ அணி 4 ரன்களில் வெற்றி பெற்றது.

பிரிமீயர் லீக் -2025 தொடரின் 21-வது லீக் போட்டி இன்று கோல்கட்டாவில் நடைபெற்றது. இதில் கோல்கட்டா அணியும் லக்னோ அணியும் மோதின.

டாஸ் வென்ற கோல்கட்டா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மார்க்ரம் மிச்செல் மார்ஷ் ஆகியோர் விளையாடினர். மார்க்ரம் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஹர்சித் ரானா பந்தில் ஆட்டமிழந்தார்.

மிச்சல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி அரைசதம்:
மிச்சல் மார்ஷ் அதிரடியாக விளையாடி, 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ரஸல் பந்தில் ஆட்டமிழந்தார்.

பூரன் ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் லக்னோ அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்தது.

கோல்கட்டா அணியின் ஹர்ஷித் ரானா 2 விக்கெட் வீழ்த்தினார்.

லக்னோ அணி, கோல்கட்டா அணிக்கு 239 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அடுத்து களமிறங்கிய கோல்கட்டா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டி காக், சுனில் நரைன் நிதானமாக ஆடினர். தொடர்ந்து குயின்டன் டி காக், 15 ரன்களில் ஆகாஷ் தீப் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து, சுனில் நரைன் 30 ரன்களில், ராதி பந்தில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த கேப்டன் அதிரடியாக 2 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடித்து அரை சதம் கடந்தார். அவர் 61 ரன்களில் ஷர்துல் தாக்குர் பந்தில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர், ஒரளவுக்கு நிலைத்து ஆடினார். அவர் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் என 45 ரன்கள் எடுத்து ஆகாஷ் தீப் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

அதன்பின்னர் வந்த வீரர்கள் ரன்கள் எடுக்க திணறினர். ஹர்ஷித் , ரிங்கு ஆகியோரின் ஆட்டம் அணிக்கு கைகொடுக்கவில்லை.

இறுதியில் கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

லக்னோ அணியின் ஆகாஷ் தீப் மற்றும் ஷர்துல் தாக்குர் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement