பலாத்கார முயற்சி வாலிபர் தலைமறைவு

சிவாஜி நகர் : பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள ராஜிவ் காலணியை சேர்ந்தவர் கார்த்திக், 24. இவர் பெண்களை தவறான கோணத்தில் பார்ப்பதையே வழக்கமாக வைத்திருந்தார்.
கடந்த 13ம் தேதி இரவு 10:30 மணி அளவில், இவரது வீட்டின் மாடியில் வசிக்கும் பெண் தனியாக படியில் இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, அப்பெண்ணை வழிமறித்த கார்த்திக், ஆபாச சைகை செய்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பெண் அங்கிருந்து தப்ப முயற்சித்தார். மேலும், தனது கணவருக்கு போன் செய்தார். ஆனால், கார்த்திக் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அப்பெண் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.
அவர்கள் கார்த்திக்கை தடுக்க முயன்ற போது, அவர் பூந்தொட்டி, கற்கள் என கையில் கிடைக்கும் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்திவிட்டு, தப்பினார். இதில், 7 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து, கடந்த 14ம் தேதி சிவாஜி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார், கார்த்திக்கை தேடி வருகின்றனர்.