விபத்து தடுப்பு நடவடிக்கையில் போலீசார்! விதிமீறும் வாகன ஓட்டிகள்

திருப்பூர் : திருப்பூர் - அவிநாசி சாலை, அவிநாசி - சேவூர் சாலை, திருப்பூர் - மங்கலம் சாலை என, நகர மற்றும் ஊரகப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில், தினமும், பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

ஏற்கனவே, நெரிசல் மிகுந்த சாலையில், வாகனங்களின் அசுர வேக பயணத்தால் ஆங்காங்கே விபத்தும் நேரிடுகிறது. 'சாலை விபத்துகளை தவிர்க்க, டூவீலர் ஓட்டிகள் கட்டாயம் 'ெஹல்மெட்' அணிய வேண்டும்; நான்கு சக்கர வாகனங்களில் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும்' என போலீசார் அறிவுறுத்தி வருவதுடன், கண்காணித்தும் வருகின்றனர்.

சாலையில், அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டுள்ள போலீசார், அங்கு பேரி கார்டு வைத்துள்ளனர். இந்த இடங்களில், வாகனங்கள் தங்களின் வேகத்தை குறைத்து செல்வதன் வாயிலாக விபத்து தவிர்க்கப்படும் என்பதே, இதன் நோக்கம்.

ஆனால், விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து கொஞ்சமும் புரிதல் இல்லாத அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டிகள் பலர், 'பேரி கார்டு' வைக்கப்பட்டுள்ள இடங்களில் கூட வேகத்தை குறைக்காமல் அதே வேகத்தில் வாகனங்களை செலுத்துவதும், முன்செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் 'ஹாரன்' ஒலி எழுப்புவதுமாக பயணிக்கின்றனர். இதனால், விபத்து ஏற்படும் வாய்ப்பே அதிகம்.

எனவே, சாலையில் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசார், 'பீக் அவர்ஸ்' நேரங்களில், 'பேரி கார்டு' வைக்கப்பட்டுள்ள சாலைகளில் நின்று, வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும். வேகத்தை குறைக்காமல், விபத்து ஏற்படுத்தும் வகையில் ஓட்டும் டிரைவர்களுக்கு உடனடி அபராதம் விதித்தால் மட்டுமே, இதுபோன்ற நிலையை தவிர்க்க முடியும் என்கின்றனர், பொதுமக்கள்.

Advertisement