நுாதன முறையில் பைக் திருட்டு

விழுப்புரம் : விழுப்புரத்தில் நுாதன முறையில் பைக்கை திருடிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த தளவானுாரைச் சேர்ந்தவர் ராம்குமார், 23; இவர், ஆன் லைனில் விளம்பரப்படுத்தி, பைக்குகளை வாங்கி, விற்று வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ராம்குமாரிடம் மொபைல் போனில் பேசிய நபர், ராம்குமாரின் முகநுால் தகவலில் வந்தபடி, ஒரு பல்சர் பைக்கை வாங்குவதாக கூறியதோடு, விழுப்புரம் சவிதா தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

அதனை நம்பிய ராம்குமார், தன்னிடம் இருந்த விற்பனைக்கு இருந்த ஒரு பல்சர் பைக்கை எடுத்துச்சென்றுள்ளார்.

அங்கு, போனில் பேசிய மர்ம நபர், விற்பனைக்கு வந்த பைக்கை ஓட்டி பார்ப்பதாக கூறி ஓட்டிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும், அந்த நபர் திரும்பவில்லை.

இது குறித்து, ராம்குமார் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடிவேல் சினிமா பட பாணியில், விழுப்புரத்தில் நடந்த நுாதன திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement