நண்பரின் கழுத்தை அறுத்து கொன்று இளைஞர் துாக்கிட்டு தற்கொலை

பெ.நா.பாளையம், ஏப். 9--

கோவை துடியலுார் அருகே நண்பரின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு, இளைஞர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை துடியலூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பேக்கரி நடத்தி வந்தவர்கள் ஜெயராஜ், 41, மகேஷ், 38. நண்பர்கள். இருவரும் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள்.

துடியலுார் அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் வீடு எடுத்து தங்கி, ஒன்றாக வசித்து வந்தனர். தினமும் காலை இருவரும் பேக்கரிக்கு வந்து விடுவர்.

நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும், பேக்கரிக்கு வராததால், பணியாட்கள் விஸ்வநாத புரத்தில் உள்ள ஜெயராஜ், மகேஷ் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்றனர்.

உள்புறம் தாளிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

துடியலுார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

வீட்டுக்குள் மகேஷ், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

ஜெயராஜ், துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்தில் உதவி கமிஷனர் சிந்து, இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெயராஜ், மகேஷ் ஆகியோர் இணை பிரியாத நண்பர்கள்.

கடந்த மாதம், 6ம் தேதி மகேஷ், விவாகரத்து ஆன ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதில் ஜெயராஜுக்கு உடன்பாடு இல்லாததால், இதுதொடர்பாக இருவருக்கும் இடை யே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று வீட்டில் இருவரும் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது, தகராறு ஏற்படவே, ஜெயராஜ், மகேசின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றுவிட்டு, தானும் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து துடியலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement