சிவகங்கை மாவட்டத்தில் மான்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பிரான்மலை, மதகுபட்டி மண்மலைமேடு, பனங்குடி, நாச்சியாபுரம், வண்ணாரிருப்பு, சங்கரபதி கோட்டை,வேலங்குடி,ஆத்திக்காடு தெக்கூர், பூலாங்குறிச்சி உள்ளிட்ட பல குறுமலை காடுகளில் பரவலாக புள்ளி மான்கள் வசிக்கின்றன. தற்போது புள்ளி மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் மான்கள் கணக்கெடுப்பு நடந்த போது 5 ஆயிரம் அளவில் மான்கள் இருந்தது.

அதன் பின்னர் கணக்கெடுப்பு நடத்தப்படாததால் தற்போதைய எண்ணிக்கை உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் மான்களின் நடமாட்டத்தை வைத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் அதன் வாழ்விடங்கள் பற்றாக்குறையாகி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள மரங்கள் அடர்ந்த கண்மாய்கள், தோட்டங்களில் குடியேறி வருகின்றன.

நாய் போன்றவற்றால் விரட்டப்படுகின்றன, முள்வேலிகளில் சிக்கி அல்லது வாகனங்களில் அடிப்பட்டு இறக்கின்றன.

மான்களை காப்பாற்ற மான்கள் கணக்கெடுப்பை நடத்தவும், அதன் வாழுமிடங்களை கண்டறிந்து அதற்கான நீர்,தீவனத்தை உறுதி செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்க வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வன உயிரின ஆர்வலர் பேராசிரியர் கோபிநாத் கூறுகையில், மனிதர்கள் வேட்டையாடுவதை நிறுத்தியதும், மான்களை அழிக்கும் எதிர் உயிரினங்களான செந்நாய்,ஓநாய்,புலி,சிறுத்தை போன்ற உயிரினங்கள் இல்லாததும் மான்கள் அதிகரிப்பிற்கு முதன்மையான காரணம்.வனத்துறையினர் பல இடங்களில் மான்களின் தேவைக்காக தொட்டி அமைத்துள்ளனர். இருப்பினும் கோடை காலத்தில் நீர் பற்றாக்குறைக்கு அருகிலுள்ள தோட்டங்கள், குடியிருப்பிற்கு வருகின்றன. அவைகளின் பாதுகாப்பிற்கு மக்கள் மான்களுடன் இணைந்து வாழ பழக வேண்டும். அதற்கான விழிப்புணர்வை தேவை.

மான்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் தன்னார்வலர் மூலம் அறிவிப்பு பலகை வைக்கலாம். தனியார் தோட்டங்களில் அதற்கான தீவனம், நீர் அளிக்க முன்வர வேண்டும். மான்களின் வாழ்விடமான வனப்பகுதியை மேலும் அதிகரிக்க வேண்டும்.'என்றார்.

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வனப்பகுதி 7.82 சதவீதமே உள்ளது. தேசிய அளவில் 25.7 சதவீதமும், தமிழகத்தில் 27 சதவீதமும் வனப்பகுதியாக உள்ளது. அதை 33 சதவீதமாக உயர்த்த வனத்துறை திட்டமிட்டுள்ளது.

அதற்கேற்ப சிவகங்கை மாவட்டத்தில் வனப்பகுதியை அதிகரிக்க வேண்டும்.

தற்போது மாவட்டத்தில் காப்புக்காடுகளில் 40 ஆயிரம் ஏக்கர் தமிழ்நாடு வனத் தோட்டக்கழகத்திடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது யூகலிப்டஸ் மரங்களை வெட்டி, மீண்டும் நடவு செய்வதால் இயற்கையான வனம் உருவாகும் வாய்ப்பு 50 ஆண்டுகளாக தடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மான்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் அதிகரித்துள்ளதால் அதன் வாழ்விடத் தேவை அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் காப்புகாட்டிற்கான இந்த இடத்தை முழுமையாக மீட்டு வளமான காப்புக்காடாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கையாக தாவரங்கள் வளர அனுமதிக்க வேண்டும். மேலும் தனித் தனியாக உள்ள குறுங்காடுகளை பிரிக்கும் சாலை பகுதியில் போக்குவரத்து பாதிக்காத அளவிற்கு விலங்குகளுக்கான பாதையை உருவாக்கி இணைக்க வேண்டியது அவசியமாகும்.

Advertisement