பொன்னேரி, கும்மிடியில் நடந்த வளர்ச்சி பணிகள்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் பிரதாப் கூறியதாவது:

பொன்னேரி



★ பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர், நந்தியம்பாக்கம், பொன்னேரி பகுதிகளில், சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், 142 கோடி ரூபாயில் மூன்று ரயில்வே மேம்பாலம் மற்றும் இணைப்பு பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

★ பழவேற்காடு ஏரி - பசியாவரம் இடையே, 18.20 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, ஏரியின் நடுவில் தீவு பகுதிகளாக இருந்த, ஐந்து மீனவ கிராமங்களுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.

★ பழவேற்காடில் கடலும் ஏரியும் இணையும் பகுதியில், 26.85 கோடியில், நிரந்தர முகத்துவாரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது.

★ நாலுார் கம்மவார்பாளையம் - மடியூர் கிராமங்களுக்கு இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 18.50 கோடி ரூபாயில், உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது.

★ ஆரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காலங்களில், பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி, ஆண்டார்மடம் ஆகிய பகுதிகளில் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்பட்டன. கரை உடைப்பு தடுக்கும் வகையில், 16 கோடி ரூபாயில் கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கும்மிடிப்பூண்டி



★ கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில், 3.50 கோடி ரூபாய் செலவில் அவசர சிகிச்சை பிரிவுடன் புதிய புறநோயாளி பிரிவு கட்டப்பட்டு வருகிறது.

★ 49 கோடி ரூபாய் செலவில், மாநகர் போக்குவரத்து கழக பணிமனை, புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.

★ 3 கோடி ரூபாய் செலவில், கும்மிடிப்பூண்டியில் ஒருங்கிணைந்த விவசாய கிடங்கு, சிப்காட் வளாகத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பில் அரசு ஐ.டி.ஐ., கும்மிடிப்பூண்டியில், 1.83 கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

--திருத்தணி--

★ திருத்தணி வட்டார அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அங்கு, 45 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வசதி செய்யப்பட்டு வருகிறது.

★ திருத்தணி ரயில் நிலையம் எதிரே, 2.20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் அறிவுசார் நுாலகம் ஏற்படுத்தப்பட்டது.

★ திருத்தணி ம.பொ.சி., சாலையில், 3.02 கோடி ரூபாய் மதிப்பில், காமராஜர் காய்கறி மார்க்கெட் நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

★ திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், புதிய பேருந்து நிலையம், 15.25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணி நடந்து வருகிறது.

★ திருத்தணி முருகன் கோவிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு தனிச்சாலை, 32.50 கோடியில் அமைக்க 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.

Advertisement